நடிகர் விஜய் நேற்று இன்று நாளை (தொடர்)
Tuesday, September 23, 2008
நடிகர் விஜய் அரசியலுக்கு அச்சாரம் போட்டுவிட்டார்... கொடி அறிமுகம்... ரசிகர் மன்றங்களுக்கு அட்வைஸ் உள்ளிட்ட பல செய்திகள் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் விஜயின் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் நன்றாக இருக்கு என்று எமது சென்னை செய்தியாளர் ரமேஷ்குமார் சொன்னபோது சரி என்றோம். அவர் எழுதிய பல விஷயங்கள் இதுவரையில் பத்திரிகைகள் எதிலும் வராத புது விஷயங்களாகவே இருந்தன.
ரமேஷ்குமார் நமக்களித்த அந்த கட்டுரை வாரம் தோறும் தொடர்ச்சியாக நெல்லைத்தமிழ் இணையத்தில் வெளிவரும்....
நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்த போதே ஷோபாவை மணம் முடித்தார். 300 ரூபாய் சம்பளத்தில் பாதி நேர பட்டினி. வறுமையின் உச்சியில் இருந்த சந்திரசேகர் குடும்பத்திற்கு நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த பட அதிபர் காஜா உள்ளிட்ட சிலர் மட்டும் ஆறுதலாக இருந்தனர். சந்திர சேகருக்கு காஜா அளித்து வந்த உதவிகள் பல. இந்த நிலையில் 1974ம் ஆண்டு ஜுன் மாதம் 22ம் தேதி விஜய் பிறந்தார். அவர் முழு வளர்ச்சி அடைந்த குழந்தையாக பிறக்கவில்லை. 8 மாதங்களிலேயே பிறந்ததால் விஜய் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டார். ஆஸ்பத்திரி செலவிற்கு கூட பணம் இல்லாமல் சந்திரசேகர் சோகத்தில் இருந்தார்.
எக்மோர் ஆஸ்பத்திரியில் இருந்து 10 நாட்களில் டிஜார்ச் செய்யப்பட் சோபாவும் விஜயும் வீட்டிற்கு டாக்ஸியில் வர பணம் இல்லாததால் பஸ்சிலேயே அவர்கள் வீட்டுக்கு வந்தனர். அந்த நேரத்தில் தான் சந்திரசேகர் பலரிடம் உதவி கேட்டார். விஜய் சினிமாவிற்கு வரும் போது யாரை தனது ஆஸ்தான குரு என்று கூறினாரோ அந்த உச்ச நடிகரிடம் போய் சந்திரசேகர் உதவி கேட்ட போது சந்திரசேகரை உதாசினப்படுத்தி உச்ச நடிகர் துரத்தினார்.
கைக்குழந்தையுடன் கோடம்பாக்கம் அருகில் உள்ள லிபர்டி திரையரங்கு அருகில் மாதம் 75 ரூபாய் வாடகைக்கு வீடு அமர்த்தி சந்திரசேகர் குடும்பத்துடன் வசித்து வந்தார். உதவி இயக்குனர் வீட்டு அடுப்புகளில் அப்போதெல்லாம் பூனைதான் தூங்கும் என்பது உண்மையான செய்தி தான். சந்திரசேகர் வீடும் இதற்கு விதி விலக்கல்ல. பால் பவுடருக்கு பணம் இல்லாத காரணத்தால் ஷோபா தெருவோர பாட்டுக்கச்சேரிகளில் கூட பலமுறை பாடி இருக்கிறார்.
இப்படித்தான் ஒரு முறை ஷோபா பாட்டுக்கச்சேரி ஒன்றுக்கு சென்று விட்டார். சந்திரசேகர் தனது பணியை முடித்து விட்டு வீட்டில் இருந்தார். விஜய்க்கு காய்ச்சல் தூக்கி வரிப்போட்டது. என்னசெய்வதேன்றே அவருக்கு புரியவில்லை...கையிலும் காசு இல்லை....
தொடர்ச்சி அடுத்த பகுதியில்