ஆடிப் போய்விட்டேன்... பிரகாஷ்ராஜ் பெருமிதம்
Wednesday, September 9, 2009
2007 ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. சிறந்த படமாக தமிழில் வெளியான காஞ்சிவரம் தேர்வு செய்யப்பட்டது. பிரகாஷ்ராஜ், ஷம்மு ஆகியோர் நடித்த இந்த படம் நெசவாளர்களின் வறுமையை மையமாக கொண்டது. இதில் நடித்த பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகருக்கான போட்டியில் சக்தே இந்தியா படத்திற்காக ஷாருக்கானும் இருந்தாராம். ஆனாலும், இந்த போட்டியில் பிரகாஷ்ராஜே வெற்றி பெற்றுள்ளார். சிறந்த மாநில மொழி படமாக ஞான ராஜசேகரன் இயக்கிய பெரியார் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனர் விருதை ஏற்கனவே பலமுறை தேசிய விருதுகள் பெற்ற அடூர் கோபால கிருஷ்ணன் பெறுகிறார். இவர் இயக்கிய நாலு பெண்கள் படத்திற்காக இவர் தேர்வு செய்யப்பட்டார்.
தனக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது பற்றி பிரகாஷ்ராஜ் கூறியதாவது-
மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததை விட தமிழ் படத்திற்கு கிடைத்திருப்பது இன்னும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. டைரக்டர் பிரியதர்ஷனுக்கு என்னுடைய முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்தி படவுலகில் பிஸியாக இருந்த நேரத்தில் ஒருநாள் என்னை சந்தித்தார். நான் ஒரு தமிழ் படம் எடுக்கப் போகிறேன். அது நல்ல கதை. அந்த கதைக்கு நீதான் பொறுத்தமாக இருப்பாய். நீ சம்மத்தித்தால் உடனே அந்த படத்தை எடுப்பேன். இல்லையென்றால் அந்த திட்டத்தை தள்ளி போட்டு விடுவேன் என்றார்.
பிறகு அந்த கதையை என்னிடம் சொன்னார். நான் ஆடிப் போய்விட்டேன். பிரியதர்ஷன் என் மீது வைத்த அன்புக்கும் பாசத்துக்கும் நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன். அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் திரு உட்பட படத்தில் பணிபுரிந்த அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன். தேசிய விருது கமிட்டிக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.
இந்த விருது எனக்கு மேலும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்து இருக்கிறது. இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்து இருக்கிறது. ஒரு நடிகர் முயற்சி செய்தால் விருது கிடைக்காது. நல்ல கதையும் இயக்குனரும் அமையும்போதுதான் விருது கிடைக்கிறது. எனவே நான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.
Source : http://tamilcinema.com
1 comments:
உங்கள் தகவல் அனைத்தும் அருமை , உங்கள் blog ஐ bookbark செய்துள்ளேன்
நன்றி
Post a Comment