ஜூலை 12ல் பொறியாளரை மணக்கிறார் நடிகை மீனா
Sunday, May 3, 2009
நடிகை மீனா பெங்களூரைச் சேர்ந்த கணினி பொறியாளரை மணக்கிறார். இவர்கள் திருமணம், வருகிற ஜுலை மாதம் 12-ந் தேதி திருப்பதியில் நடக்கிறது.
சிவாஜிகணேசன் நடித்த நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், மீனா. ஒரு புதிய கதை என்ற படத்தின் மூலம் கதாநாயகி ஆனார். தொடர்ந்து, என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக நடித்தார்.
ரஜினிகாந்த் ஜோடியாக எஜமான் படத்தில் நடித்த பின் நடிகை மீனா ஹீரோயின் ஆக பிரபலமானார். தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தை அடைந்தார். தொடர்ந்து கமலஹாசன், பிரபு, விஜயகாந்த், முரளி, சரத்குமார், அர்ஜூன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளவர்.
சினிமாவில் வாய்ப்பு குறைந்த நேரத்தில், சின்னத்திரைக்குள் நுழைந்து லட்சுமி தொடரில் நடித்தார். அவர் தற்போது கல்யாணம் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் அவர் நடிக்கத் துவங்கிய போது மீனாவின் கல்யாணம் என்ற தலைப்பில் செய்திகள் வெளியாகின. அந்த செய்தி தற்போது உண்மையாகியுள்ளது.
மீனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகன் பெயர், வித்யாசாகர். பெங்களூரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில், பொறியாளராக பணிபுரிகிறார். இது, பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம்.
நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீனா வீட்டில் நடந்தது. நெருங்கிய உறவினர்களும், நடிகைகள் சிலரும் கலந்துகொண்டார்கள்.
மீனா-வித்யாசாகர் திருமணம் வருகிற ஜுலை மாதம் 12-ந் தேதி, திருப்பதியில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஜுலை 14-ந் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.
1 comments:
இனி யாரும் மீனாவை முதிர்கன்னி என்று சொல்ல முடியாது ;-)
Post a Comment